வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து ஐ.தே.க. சபாபீடத்தில் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதாதைகளை ஏந்திய வாறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அதனை விஞ்சும் வகையில் ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர் இதனால் சபா பீடம் இறுதி நேரத்தில் சூடுபிடித்திருந்தது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியை சேர்ந்த இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பிக்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உறுப்பினர்கள் எதிரும் புதிருமாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மௌமாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அரசாங்கத்தின் 2010 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கா பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. தினப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் வரவுசெலவுத்திட்ட பிரேரணையை சமர்ப்பிப்பதற்கான யோசனையை பிரதமர் தி.மு. ஜயரடன் முன்வைத்தார்.
இதனையடுத்து நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வரவுசெலவுத்திட்ட உரையயை வாசித்தார். அவ்வுரையின் முடிவுரை வாசிப்பதற்குள் எழுந்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினையொன்றை கிளப்பி வரவுசெலவுத்திட்ட யோசனையில் மக்களுக்குரிய முன்மொழிவுகள் இல்லை என உரக்க சத்தமிட்டு கூறியதுடன் தனது மேசைக்கு கீழிருந்த பதாதையை ஏந்தியவாறு கோஷமெழுப்பினார்.
அவருடன் ஐக்கிய தேசியக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் சிலரும் இணைந்து கொண்டு கோஷம் எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதில் சீனியின்றி தேனீர் குடி, காஸ் இன்றி அவிக்காமல் சாப்பிடவா? 40 ரூபாவிற்கு பாணா? போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து எழுந்த ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் சபா பீடமே அதிர்ந்தது. எதிர்தரப்பிலிருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆளும் பக்கத்திற்கு சென்று கோஷம் எழுப்பி எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இருதரப்பு நடவடிக்கைகளையும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சிரித்துக்கொண்டே அவதானித்து கொண்டிருந்ததுடன் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக்கூட்டணி மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிலைமையை அவதானித்து கொண்டிருந்தனர். இருதரப்பு கோஷங்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் சரத் அமுனுகம முழுமூச்சில் வரவு செலவுத்திட்ட உரையை மாலை 4.15 மணியளவில் நிறைவு செய்தார். இதனையடுத்து சபைநடுவே ஓடிச்சென்ற ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காதர் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்கவிற்கு கைலாகு கொடுத்து ஏதோ கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.
வரவுசெலவுத்திட்ட உரைக்கு பின்னர் நிதியமைச்சரினால் தேனீர் உபசாரம் வழங்கப்பட்டதுடன் அதில் ஆளும் எதிர்த்தரபபு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாறிக்கொண்டமை விசேட அம்சமாகும்.
திகதி:30 06 2010 - 06:32:42 நிருபர்:001